அழகிய தீயே...

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமும் எனக்கு பிடித்த திரைப்படமும் இது தான். இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த காலகட்டத்தில் தான் "கில்லி", "அட்டகாசம்" போன்ற பெரிதும் எதிர்பார்க்கபட்ட திரைப்படங்களும் வெளிவந்தன.


ஒரு உணவு விடுதியில் தனது வருங்கால மனைவியை சந்திக்கும் ஒரு நபர் தனது நண்பர்களின் கதையை பற்றி சொல்வது தான் திரைப்படம். அவர் சொல்லும் கதையில் வரும் நான்கு நண்பர்களான சந்திரன் (பிரசன்னா), சித்தப்பா, மூர்த்தி மற்றும் பாலா ஆகியோர் சினிமா துறையில் பணிபுரிபவர்கள். சினிமா துறையில் வேலை இல்லாத சமயங்களில் கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்கின்றார்கள். இந்நிலையில் நந்தினி (நவ்யா நாயர்) தனக்கு நிச்சயமாயிருக்கும் திருமணத்தை நிறுத்த சந்திரனின் உதவியை அவளுடைய நண்பன் மூலமாக நாடுகிறாள். நந்தினி தனது வீட்டில் சுதந்திரமான சூழ்நிலை இல்லாத காரணத்தாலும், அவளது தந்தை மற்றும் அண்ணனின் அடாவடிதனம் பிடிக்காத காரணத்தாலும் திருமணத்தையும் அந்த வீட்டையும் வெறுக்கிறாள்.


நந்தினிக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை அரவிந்த் (பிரகாஷ்ராஜ்) வெளிநாட்டில் வசிக்கும் நபர். திருமணத்திற்காக இந்தியா வருகிறார். திருமணத்தை நிறுத்த சந்திரன், அரவிந்தை சந்தித்து தான் அந்த பெண்ணை காதலிப்பதாக பொய் சொல்கிறான். கடைசியில் அந்த பொய்யே அவர்களுக்கு வினையாக, இருவரும் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அதன் பிறகு அவர்கள் எவ்வாறு சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பதை திரைப்படத்தில் கண்டுமகிழுங்கள்.


யதார்த்தமான கதாபாத்திரங்கள், இயல்பான திரைக்கதையோடு ஒன்றிய நகைச்சுவை காட்சிகள் என்று எனக்கு இந்த திரைப்படத்தில் பிடித்த விஷயங்கள். பிரசன்னாவின் நடிப்பு இந்த படத்தில் இயல்பாக இருக்கும், அது போல சில நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ் கலக்கி இருப்பார். திரைப்படத்தின் இறுதி கட்டங்களில் வரும் அந்த நாயின் அசைவுகள் என்னை கவர்ந்திருந்தது.


இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் விநாயகம் இசை அமைத்துள்ளார். எனக்கு இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. குறிப்பாக "விழிகளின் அருகினில் வானம்..." என தொடங்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.



டிஸ்கி:
இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் மறுபதிப்பாக வெளிவந்தது.
தெலுங்கு பதிப்பில் "அல்லு அர்ஜுன்" மற்றும் "ஜெனீலியா" நடித்திருப்பார்கள். தெலுங்கு பதிப்பில் வரும் இரு பாடல்கள் எனக்கு பிடிக்கும். அவற்றினை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.







SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment