பாரநார்மல் ஆக்டிவிட்டி 2 (Paranormal Activity 2)

எனக்கு அன்றைய தூர்தர்ஷன் காலகட்டத்திலிருந்தே திகில் படங்களை காண்பதென்றால் கொஞ்சம் அல்ல நிறையவே பயம். என்ன தான் உள்ளுக்குள் பயம் இருந்தாலும், அந்த மாதிரி திகில் படங்களை பார்க்க தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் முதல் ஆளாக உட்காந்திருப்பேன். ஏனென்றால் அப்போது தான் மிகவும் பயமுறுத்தும் காட்சிகள் வரும் போது தொலைக்காட்சி பெட்டிக்கு கீழே உள்ள மேசைக்குள் ஒளிந்து கொள்ளமுடியும். அந்த அளவுக்கு பெரிய தைரியசாலியாக இருந்தேன் :). அதன் பின்னர் கால ஓட்டத்தில் திகில் படங்களை  கண்களையும், காதையும் மூடாமல் முழுவதும் பார்க்க பழகிக் கொண்டேன். இதையெல்லாம் நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், நான் சமீபத்தில் பார்த்த "பாரநார்மல் ஆக்டிவிட்டி 2" திரைப்படமும் அமானுஷ்ய சக்திகளை பற்றிய திகில் ஒரு படம் தான்.


திரைப்படத்தின் கதை என்ன.....? அதற்கு முன்னால், இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து விடுவது நல்லது. ஏனென்றால், இந்த படத்தின் முதல் பாகத்தையும் இந்த பாகத்தையும் இறுதியில் இணைக்கிறார்கள். அதனால், முதல் பாகத்தை பார்த்துவிட்டு, இந்த திரைப்படத்தை கண்டுகளியுங்கள். "க்ரிஸ்டீ" (Sprague Grayden) மற்றும் "டேன்" (Brian Boland) இருவரும் தம்பதிகள். இவர்களுக்கு "ஹன்டர்" என்று ஒரு மகன் பிறக்கிறான். டேனின் முதல் மனைவிக்கு பிறந்தவள் தான் "அலி" (Molly Ephraim).


இவர்கள் வசிக்கும் வீடு மர்மமான முறையில் ஒரு நாள் கொள்ளை அடிக்கபடுகிறது. அந்த கொள்ளையின் போது, அவர்கள் வீடு முழுவதும் அலங்கோலமாக கிடக்கிறது. ஆனால், கொள்ளையடிக்கப்பட்டது க்ரிஸ்டீயின் சகோதரி "கேட்டி" (Katie Featherston) கொடுத்த தங்க ஆபரணம் மட்டுமே. ஆனால், ஹன்டரின் அறை மட்டும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காதது போல வைத்தது வைத்த படி இருக்கிறது. இனிமேல் ஏதாவது திருட்டு நடந்தால், அதை கண்காணிக்க அவர்களது வீடு முழுவதும் ஒளிப்பதிவு கருவிகள் பொருத்தப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது ஏதாவது சத்தம் கேட்பதும், பொருட்கள் தானாக நகர்வதும் என்று அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வீட்டில் பணி புரியும் "மார்ட்டின்" வீட்டில் ஏதோ ஒரு தீய சக்தி இருப்பதை உணர்கிறாள். ஒரு நாள், பத்தி போன்ற பொருட்களை கொளுத்தி அவற்றை விரட்ட முயற்சிக்கும் போது, டேன் அவளை தடுக்கிறான், மேலும் அடுத்த நாளே அவளை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறான்.


இந்நிலையில் அலி, இது பற்றிய நிகழ்வுகளை தனியாக துப்பறிய தொடங்குகிறாள். அப்போது அவள் ஒரு விஷயத்தை புத்தகங்கள் மூலம் படித்தறிகிறாள். அது என்னவென்றால், குடும்பத்தின் நலன் கருதியும், அதீத சக்தியை பெறவும் தங்களது பரம்பரையில் தோன்றும் முதல் ஆண் வாரிசை தீய சக்திகளுக்கு படைப்பதாக ஒப்பந்தம் செய்து கொள்வது.


நாட்கள் செல்ல செல்ல அமானுஷ்ய நிகழ்வுகள் அதிகமாகிறது. ஒரு முறை அலி, ஹன்டர் மற்றும் அபீ (வீட்டில் வளர்க்கப்படும் நாய்) மட்டும் வீட்டில் இருக்கும் போது, அலி மட்டும் வீட்டிற்கு வெளிய தள்ளப்பட்டு கதவு தானாக அடைத்து கொள்கிறது. அது போல, மற்றொரு நாள் அவர்கள் வளர்க்கும் நாய் அமானுஷ்ய சக்தியால் துன்புறுத்த படுகிறது. அதனை சரி செய்ய டேன் மற்றும் அலி மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்த வேளையில், க்ரிஸ்டீ தனது குழந்தையின் அறையில் சத்தம் கேட்பதறிந்து அங்கே செல்லும் போது, தானாக இழுத்து வரப்பட்டு படிக்கட்டிற்கு கீழே உள்ள அறையில் சில மணி நேரம் வைக்க படுகிறாள். இதற்கு அடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் திகிலின் உச்சம்.


டிஸ்கி1:
இந்த திரைப்படம் ஒரு ஆவணப்படம் (Documentary) போல தான் இருக்கும் (முதல் பாகமும் அப்படித்தான்). எனக்கு முதல் பாகத்தை விட, இந்த பாகம் தான் பிடித்திருந்தது.

டிஸ்கி2:
இந்த படத்தை நான் மட்டும் தனியே இரவு 10 மணிக்கு பார்த்தேன். எவ்வளவு பெரிய தைரியசாலியாகிவிட்டேன் என்பதை நீங்கள் திரைப்படத்தை கண்ட பிறகு உணர்வீர்கள் :)
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment