சீதா லக்ஷ்மி - பாகம் 2

கடந்த வாரத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


பாகம் 2

"ஹெலோ சீதா..." என்றவுடன் தனது கணினியின் மீது இருந்த கவனத்தை கலைத்து ரகுவின் பக்கம் தலை சாய்த்தாள். காதலை சொல்லிவிடலாம் என்று தனக்குள் தேக்கி வைத்திருந்த நம்பிக்கை அவள் பார்வை பட்ட நேரத்தில் உடைந்தது. அதன் பிறகு ரகுவின் மனதிற்குள் "பார்த்து முழுதாய் மூன்று வாரங்கள் தான் ஆகி இருக்கிறது, இன்று தான் முதல் முதலில் பேசப்போகிறோம், முதல் உரையாடலிலே "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் உன்னை பற்றி என்ன நினைப்பாள் என்று குடைந்தது மனமென்னும் குரங்கு". இதே குரங்கு தான் சற்று நேரத்திற்கு முன்பு அவளை பற்றிய கவிதைகளை காகிதத்தில் கிறுக்க செய்தது, இப்போது அதை அவளிடம் கொடுக்க நினைக்கும் போது தடா போடுகிறது.

எனக்கும் அவளுக்கும்
காதல் பிறந்தது...
பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்கும் போது - அதனை
கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது
மனசாட்சி...!!


என மனதிற்குள் நினைத்து கொண்டான் ரகு. ரகுவின் கைகளில் நடுக்கம் இன்னும் குறையவில்லை, இறுதியில் அந்த காகிதத்தை கைகளிலே வைத்து கொண்டான். மெல்ல சீதாவுடன் பேச தொடங்கினான். என்ன சொல்லி ஆரம்பிப்பது என்ற பலத்த யோசனைக்கு பிறகு, "இன்னும் கிளம்பவில்லையா?" என்று கேட்டான். அவள் நேரமாகி தான் கிளம்புவாள் என்று அவனுக்கு தெரியும், இருந்தாலும் பேச்சுவார்த்தையை தொடங்க ஒரு சாக்கு வேண்டுமே. அவள் "நான்  வசிக்கும் இடத்திற்கு நேரடி பஸ் கிடையாது எனவும், ஏதாவது தனியார் பேருந்தில் தான் செல்வேன்" என்று கூறுகிறாள். "கடைசியாக கிளம்பும் பேருந்து 9 மணிக்கு தான், நான் எப்போதும் அதில் தான் செல்வது வழக்கம்" என்றும் கூறுகிறாள். நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டான் ரகு, அவள் தான் JP நகரில் வசிப்பதாக கூறுகிறாள். அடுத்து ரகுவின் இருப்பிடத்தை கேட்டாள், அவன் கோரமங்களாவில் வசிப்பதாக கூறினான். அடுத்து என்ன கேட்க என்று யோசித்துவிட்டு, MBA வரை படித்தவன் கொஞ்சம் பெண்களிடம் எப்படி கடலை போடுவது என்பதை பற்றி படிக்காமல் விட்டு விட்டோமே என்று அன்று தான் வருத்தப்பட்டான் ரகு.
சீதாவிடம் யாருடன் தங்கி இருக்கிறீர்கள், என்று மெல்ல ஆரம்பித்தான். அவள் தனக்கு இங்கே நண்பர்கள் யாரும் கிடையாது என்றும், தனியே விடுதியில் தங்கியிருப்பதாக சொல்கிறாள். மேலும் தனது கல்லூரி படிப்பு, வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர், தந்தை என்ன பணியில் இருக்கிறார் என்று எல்லாவற்றையும் வெளிப்படையாக ரகுவிடம் கூறுகிறாள். ஒரு பெண், ஒருவர் மீது நம்பிக்கை வைத்துவிட்டாள் தனது  சொந்த விஷயங்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வாள் என்று ரகு உணர்ந்து கொண்டான். கடைசியாக ரகு சீதாவிடம், உங்களுக்கு இங்கே தமிழ் நண்பர்கள் இல்லை என்ற கவலை வேண்டாம், என்னிடம் நீங்கள் எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் என்றும் கூறுகிறான். அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவளின் கைபேசி எண்ணையும் வாங்கி கொண்டான் ரகு.

அன்று இரவு முழுவதும் ரகுவிற்கு சீதாவின் நினைப்பு தான். நண்பர்கள் இல்லாமல் தனியே வாழும் கொடுமை என்னவென்று ரகுவிற்கு தெரியும். அந்த கொடுமையை சீதா அனுபவிக்க கூடாது என தனக்குள் உறுதி செய்து கொண்டான். தனது பெண் நண்பர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தி அவளது தனிமையை போக்குவது தான் முதல் கடமை என நினைத்துகொண்டான். நாம் ஒருவர் மீது எப்போது அளவிற்கு அதிகமான அன்பையும் அக்கறையையும் காட்டுகிறோமோ அப்போது தான் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்று ரகுவிற்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது வீட்டில் உள்ள கணினியில் காதல் பாடல்கள் ஒரு பக்கம் விடிய விடிய இசைத்து கொண்டே இருக்க, கனவிற்குள் அவளை தேடி தூக்கம் தொலைத்து போன இரவானது ரகுவிற்கு .

மறுநாள், காலை 6 மணி அளவில் ரகு தனது கைப்பேசியை எடுத்தான். காலையில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது ரகுவிற்கு வழக்கம், இன்று சீதாவிற்கும் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். ஆனால், அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ரகு தனது நண்பர்களுக்கு அனுப்பும் போது பதிலை எதிர்பார்த்தது கிடையாது. ஆனால், சீதா விஷயத்தில் எதிர்பார்த்தான். அலுவலகத்திற்கு சென்ற பிறகும் அதை பற்றி சீதா சட்டை செய்யவில்லை. இப்படி தான் எல்லா பெண்களும் இருப்பார்கள் போல என தனக்குள் நினைத்துகொண்டான். மெல்ல தனது இருக்கையில் இருந்து எழுந்து சீதாவிடம் சென்று தேநீர் அருந்த தான் செல்வதாகவும், நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டான் ரகு.

(பின் தொடருங்கள்...)


டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment